Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் ஆன்மா எப்படி சிதையும்...? வெளிநாடுகளின் படையெடுப்புகளாலா அல்லது தொடர் குண்டு வெடிப்புகளாலா ...? இல்லை நிச்சயம் இல்லை. இவர்களால், இந்தியாவின் ஆன்மாவிற்கு ஒரு சிறு சிராய்ப்பைக் கூட ஏற்படுத்த முடியாது என்பதுதான் உறுதியான உண்மை.

பிறகு எப்படி இந்தியாவின் ஆன்மாவை சிதைப்பது...? இந்தியாவின் பண்பு சிதையும்போது அதன் ஆன்மாவும் மோசமாக சிதையும். இப்போது அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

எந்தவொரு நாடும் வெறும் நிலப்பரப்புகளால் மட்டும் அடையாளப்படுத்தப்படுவது இல்லை; அங்கு வாழும் மக்கள்தான் அந்த நாட்டின் முகம். அவர்களின் பண்புதான் அந்த நாட்டின் பண்பு. அதனால்தான், பல தசாப்தங்கள் ஆனாலும் இன்றும் காந்தி, இந்தியாவின் அடையாளமாக இருக்கிறார்.

காந்தி, இந்தியாவின் பண்பாக உண்மையை விட்டுச் சென்றார். அவர் நம்பிய உண்மைக்காக தன்னைத்தானே வருத்திக் கொண்டார். அந்த உண்மைதான் இந்தியாவின் பண்பாக இருக்கிறது. அந்த உண்மை சிதையும் போது, இந்தியாவின் ஆன்மாவும் சிதையும். இப்போது இந்தியாவின் ஆன்மா மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது.

உண்மையின் மீதான யுத்தம்: இந்தியாவின் ஆன்மா எப்படி சிதைந்து வருகிறது என்பதற்கு காத்திரமான பல எடுத்துக்காட்டுகள் இந்தியா முழுவதும் விரவிக் கிடந்தாலும், காயம்பட்ட ஆன்மாவின் மீது குச்சியைவிட்டு ஆட்டுவது ராஜீவ் கொலை வழக்குதான்.

உண்மை மீது தொடுக்கப்பட்ட மோசமான யுத்தம் அது. ஆம். எந்த அறமும் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையின்போது பின்பற்றப்படவில்லை.

விசாரணை அறிக்கையில் பல இட்டுக்கட்டுகளும், புனைவுகளும் இருக்கின்றன என விசாரணை அதிகாரிகளே ஒத்துக்கொண்ட பின், இதை உண்மை மீது தொடுக்கப்பட்ட யுத்தம் என்று சொல்லாமல் வேறு எப்படி விவரிப்பது...? நிற்க.

வெறுப்பைக் கக்கும் சில அரசியல்வாதிகள் போல, ராஜீவ் கொலையை நியாயப்படுத்தவில்லை. நிச்சயம், அது அநியாயமான சம்பவம்தான். அதற்கு காரணமானவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டும்தான்.

அதில் எள்முனை அளவும் மாற்று கருத்தில்லை. ஆனால், இப்போது தண்டனைக்கு உள்ளாகி இருக்கும் அனைவரும் உண்மையான குற்றவாளிகளா...?

ராஜீவ் கொலை வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை, நாங்கள் சந்தேகப்பட்டவர்கள் அனைவரையும் துன்புறுத்திதான் வாக்குமூலம் வாங்கினோமென்று விசாரணை அதிகாரிகளே, அழுத்தங்களை கடந்து உண்மைக்கு பக்கம் நிற்க முன் வந்திருக்கிறார்கள்.

ராஜீவ் கொலை வழக்கு விசாரணைக் குழுவில் இருந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி வி. தியாகராஜன், “நான் விசாரணையின் போது, பேரறிவாளன் சொன்ன அனைத்தையும் பதிவு செய்யவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்யும்போது, நான் சில வரிகளை விட்டுவிட்டுதான் பதிவு செய்தேன் என்றுள்ளார்.

அதுவும் அவர் விட்டதாக சொல்லும் வரி, ‘அவர்கள் ஏன் பேட்டரி வாங்க சொன்னார்கள் என்று எனக்கு தெரியாது என்று பேரறிவாளன் கூறியதாகும்.

மேலும் அவர், ராஜீவ் காந்தி கொலை செய்யப்படபோகிறார் என்று அறிவுக்கு தெரிந்திருக்கவில்லை. அது குறித்த ஆதாரங்களும் எங்களிடம் இருந்தது என்கிறார்.

மேலும், அவரே, குற்றம் நடைபெறப்போவது குறித்து தெரிந்திருக்காதவனை எப்படி குற்றவாளி என்று சொல்ல முடியும்? பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்டது அநீதி என்கிறார்.

இதை ஏன் அப்போதே அவர் சொல்லவில்லை என்ற கேள்விக்கு, அவர் அளித்த பதில் இந்தியாவின் ஆன்மாவை பிரதிபலிப்பது. ஆம். என்னால் அப்போது எதுவும் செய்யமுடியவில்லை.

ஆனால், இந்த உண்மை என்னை சஞ்சலப்படுத்தியது. நான் அமைதியின்மையில் தவித்தேன். என்றுள்ளார். ஆம். இந்தியாவின் ஆன்மாவான உண்மையை நேசிப்பவர்களால், எக்காலமும் உண்மையை விட்டு விலகிச் செல்ல முடியாது.

தியாகராஜனாலும் அதிலிருந்து விலகிச் செல்ல முடியவில்லை. அது மட்டுமல்லாமல், சி.பி.ஐ விசாரணைக் குழுவில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெபமணி மோகன்ராஜ், நாங்கள் ராஜீவ் வழக்கு விசாரணைக் கைதிகளை சித்திரவதை செய்தே வாக்குமூலம் பெற்றோம் என்கிறார்.

பின்பு அது எப்படி நேர்மையான விசாரணையாக இருக்க முடியும். மேலும் விசாரணை அதிகாரிகளின் அவ்வப்போதைய பேச்சுகள், பேட்டிகள் போன்றவை, ராஜீவ் கொலை வழக்கு விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமைந்து வருகின்றன.

இது அப்பட்டமான இந்தியாவின் ஆன்மாவாகிய உண்மையின் மீதான களங்கமில்லையா?

இந்தியாவின் ஆன்மாவும், அற்புதம்மாளும்: ராஜீவ் கொலை வழக்கில் நேர்மையாக விசாரணை நடைபெறவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் விசாரிக்கப்படவே இல்லை என்பது மனசாட்சி உள்ள இந்திய உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.

ஆனால், இந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான் தாங்கள் இந்தியாவை அளவு கடந்து நேசிப்பதாக பிதற்றிக் கொள்பவர்கள். வெற்றுப்பேச்சைவிட செயலே மேலானது.

உண்மையில் இவர்கள் இந்தியாவை நேசிப்பார்களாயின், இவர்கள் உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அவர்கள் அதிகாரத்தின் உச்சாணி கொம்பில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அதுதான் இந்தியாவை நேசிப்பதற்கான அடையாளம். அதைதான் இந்தியாவின் முகமான காந்தி செய்தார். இதற்கெல்லாம் மேலாக அற்புதம் அம்மாள்.

கடந்த இருபது ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கும், சிறைச்சாலைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். நீதிக்காக வெகு நாட்கள் காத்திருந்துவிட்டார்.

ஆனாலும், அவர் இன்னும் இந்திய நீதித்துறை மீதான நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கையை சிதையவிடுவோமாயின், இந்தியாவின் ஆன்மாவை நாம் அனைவரும் சேர்ந்தே சிதைக்கிறோமென்று அர்த்தம்.

எனவே இந்தியாவின் ஆன்மாவை சிதைந்துவிடாமல் காக்க, ராஜீவ் கொலை தொடர்பான முழு உண்மைகளும் வெளிவரவேண்டும். அதற்கு பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்.

0 Responses to ராஜீவ் கொலையும், ஒரு தாயின் காத்திருப்பும், இந்தியாவின் ஆன்மாவும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com