Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மற்றும் மேற்கு ஆப்கானிஸ்தானில் பருவ மழை காரணமாகத் திடீரெனெ ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 100 இற்கும் அதிகமான மக்கள் பலியாகியிருப்பதாகவும் 150 பேர் வரை காணாமற் போயிருப்பதாகவும் 3000 இற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்திருப்பதாகவும் ஆப்கான் அதிகாரிகள் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை முதல் பெய்து வரும் பருவ மழையில் ஆப்கானின் ஜோவ்ஷ்ஜான், ஃபார்யாப், சார்-ஏ போல், பால்க், சமன்கன் மற்றும் டக்கர் என்ற 6 மாகாணங்களைச் சேர்ந்த 23 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் ஐ.நா இன் மனித உதவி அமைப்பான OCHA இன் தலைவர் அயிடன் ஓ லெயாரி இந்த வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 123 பேர் பலியாகிருப்பதை உறுதி செய்துள்ளார். எனினும் இந்த வெள்ள அனர்த்தத்தின் சேத விபரங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. அதிகமாகப் பாதிக்கப் பட்ட ஜோவ்ஷ்ஜான் மாகாணத்தில் மட்டும் 6000 பொதுமக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் இங்கு வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த மிக உறுதியான பொறிமுறை தேவைப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. வான் வழி மீட்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ள இரு இராணுவ ஹெலிகாப்டர்களின் சேவை அறவே போதுமானதாக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஃபர்யாப் மாகாணத்தில் மட்டும் 2309 வீடுகளும் பாரியளவு விவசாய நிலங்களும் சேதமடைந்துள்ளன. இதேவேளை சேத விபரம் குறித்த கணக்கெடுப்பு ஆரம்பிக்கப் பட்டுள்ளதுடன் இடம் பெயர்ந்த மக்களுக்கு மிக அதிகளவில் சுத்தமான குடி நீர், மருத்துவ சாதனங்கள், உணவு, ஏனைய அடிப்படை உபகரணங்கள் மற்றும் கம்பளி என்பன தேவைப் படுவதாக நாடு முழுவதும் அறிவிக்கப் பட்டுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானில் அதன் புவியியல் அமைவு காரணமாகப் பருவ மழை எப்போதும் திடீர் வெள்ள அனர்த்தத்தை விளைவித்து வருகின்றது. 2013 ஆகஸ்ட்டிலும் பருவ மழையால் வெள்ளம் ஏற்பட்டு 80 பேர் வரை கொல்லப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஆப்கானிஸ்தானில் திடீர் வெள்ளப் பெருக்கு!:100 இற்கும் அதிகமான மக்கள் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com