போர்க்காலத்தின்போது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஆயுத தளவாடங்கள தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கொள்வனவு செய்தார்கள் என்று அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்ட நான்கு ஈழத்தமிழர்களில் தீர்ப்பு வழங்கப்படாத ஏனைய இருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்துள்ளது.குற்றத்தை ஒப்புக்கொண்ட சகிலால் சபாரட்ணம், திருத்தணிகன் தணிகாசலம் ஆகிய இருவருக்குமே நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் சதாஜகன் சராசந்திரனுக்கு 26 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நடராசா யோகராசாவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது.
அமெரிக்க சட்டங்களின் படி குற்றவாளிகளாக இனங்காணப்பட்டதை அடுத்து, அமெரிக்க சட்டங்களின்படி அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தனர். இதனை அடுத்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ தாயக பகுதிகளில் சிறிலங்கா அரச படைகளின் விமான தாக்குதல்களின்போது பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவ்விமானங்களை சுட்டுவீழ்த்துவதற்கான ஏவுகணைகளையே இவர்கள் வாங்க முயற்சித்திருந்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வின்னி என அழைக்கப்படும் ஒருவரால் ஏவுகணைகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டிருந்தனர் என்றும் அத்துடன் 500 ஏ.கே. ரக துப்பாக்கிகளை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமும் இவர்களால் செய்யப்பட்டது என்றும் ஆனால் வின்னி எனப்படும் நபர் அமெரிக்காவின் இரகசிய புலனாய்வு அதிகாரி என்ற விடயம் இவர்கள் கைது செய்யப்படும்போதே இவர்களுக்கு தெரியவந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to ஈழப்போராட்டத்துக்கு ஏவுகணைகள் வாங்கிய குற்றச்சாட்டு: மேலும் இருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!