பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகளின் காரியாலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த மனித உரிமைகளுக்கான அறிக்கையில் போர்க் குற்றங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது.போர்க் குற்றங்கள், கருத்துச் சுதந்திர மறுப்பு மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கான மறுப்பு போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு ஈடுபட்டுள்ளதாக இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்டினால் இம்மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ்வறிக்கையில், போர்க் குற்றங்கள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியிலில் இவ்வருடம் சிறிலங்கா மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அடிப்படை மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் இவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்காவின் அமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு ஆதரவானவர்கள் ஆயுதங்களுடன் நடமாடி வருவது குறித்தும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் சில ஆயுதக் குழுக்கள் போரின் போது இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஆயுதங்களுடன் நடமாடி வருவதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், தமக்கு எதிரான கொள்கை உடையவர்களை அக்கட்சி அச்சுறுத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது என இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
2009ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்த ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கபட்ட போதிலும், அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை என இவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Robin Cook இனால் 1997ஆம் ஆண்டு முதன் முதல் மனித உரிமைகளுக்கான அறிக்கை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to போர்குற்ற நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவையும் சேர்த்தது பிரித்தானியா!