வில்பந்த் நகரசபை, துறோம்பிளே ஓன் பிரான்ஸ் நகரசபைகளுடன் இணைந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் ஏற்பாடு செய்த சுனாமி (ஆழிப்பேரலை) 6ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 26.12.2010 மாலை 4.30 மணிக்கு வில்பந் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.இந்தோனேசிய சுமத்திரா தீவில் ஏற்பட்ட கடற்கோள் தென்கிழக்காசியாவின் இந்து சமுத்திர கரையோர நாடுகளை தாக்கியது. இப்பேரலைத் தாக்கம் 250000ற்கு மேற்பட்ட மக்களை காவுகொண்டது. இந்தோனேசியாவில் இரண்டுலட்சம் மக்களும் இலங்கையில் முப்பத்தையாயிரத்துக்கு மேற்பட்ட மக்களையும் காவுகொண்டது. இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் பெரும் உயிர் அழிவையும், பொருள் அழிவுகளையும், உளவியல் பாதிப்பையும் ஏற்படுத்தியது. உலகையே உலுக்கிய இச்சோகநிகழ்வு நடந்து 6அண்டுகள் உருண்டோடி விட்டது.
தமிழர் தாயகப் பகுதியில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி வாழ்வாதாரங்களையும், உடமைகளையும், உறவுகளையும் இழக்கப்பட்ட கொடுமையின் வடுச்சுமந்து இன்றும் நாம்....
இந்நிகழ்வின் பிரதான பொதுச் சுடரை தமிழர் புனர்வாழ்வுக்கழக பிரான்ஸ் பணிப்பாளர் திரு.சுந்தரவேல் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் சாவடைந்த மக்களையும், தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களையும் நினைவு கூர்ந்து அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
சுனாமி நினைவு வணக்க சுடரை சுனாமி தாக்கத்தில் தனது சகோதரியை பறிகொடுத்த திருமதி. அகிலா ஜெ. அவர்கள் ஏற்றிவைத்தார். தலைவர் கோணேஸ்வரன் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். வில்பந்த் உதவி நகரபிதா அவர்கள் சிற்றுரை ஆற்றினார். அவர் தெரிவிக்கையில் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களை நீங்கள் நினைவு கூருவதையிட்டு பெருமைப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வு பெற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட நகரமன்ற உறுப்பினர்கள், தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர், தமிழ் கலை பண்பாட்டுக் கழக உறுப்பினர் மற்றும் த.பு.க கௌரவ உறுப்பினர் ஆகியோர் சுனாமி நினைவு சிற்றுரைகளை நிகழ்த்தினர்.
திருமதி. தனு~h மகேந்திரராஜா அவர்களின் நெறியாழ்கையில் செவ்றோன் - ஒல்நே சூபுவா தமிழ்ச்சோலை மாணவிகள், திருமதி. றொணி செல்வராஜா அவர்களின் நெறியாழ்கையில் ரான்சி தமிழச்சோலை மாணவிகள் மற்றும் திருமதி. செலினா மகேஸ்வரன் அவர்களின் நெறியாழ்கையில் வில்நெவ் சென் ஜோர்ஜ் தமிழ்ச்சோலை - நாட்டிய சாஸ்திரா பள்ளி மாணவிகள் சிறப்பு நடனங்களை வழங்கினர்.
மீரா பாலகணேசன், செல்விகள் தாரணி, விதுசா, அதிசயா, அகல்யா, அபினயா, ராணி, அவந்தியா, தாட்சாயினி அவர்களும் இணைந்து “பண் உடைந்துபோன கடலாள்” என்னும் கவிதை நாடகத்தை பிரெஞ்சு மொழியில் வழங்கினர்.
செல்விகள் சமந்தா சிந்துஜா “சுனாமி அவலநாள் முதல் இன்றுவரை” என்னும் தலைப்பில் பிரெஞ்சுக் கவிதை வழங்கினர்.
இந்நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். நிகழ்வு மாலை 7.30 மணிக்கு நிறைவுபெற்றது.



0 Responses to பிரான்சில் ஆழிப்பேரலை நினைவு வணக்க நிகழ்வு