கர்நாடகத்தில் பாலியல் வன்கொடுமையில்
ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்று, அந்த மாநில
முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் எச்சரிக்கை விடுத்தார்.
கர்நாடக பாஜக மகளிர் அணி சார்பில், பெங்களூரில் நடைபெற்ற மகளிர் மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டைத் தொடக்கி வைத்து அவர் பேசியதாவது:
பாலியல்
வன்கொடுமையில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். எந்தக்
காரணத்தை முன்னிட்டும் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கக்
கூடாது. பாலியல் வன்கொடுமைகள் மீண்டும் நிகழாத வண்ணம் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன்
கிடைக்காத வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதுகுறித்து
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து, தகுந்த நடவடிக்கை எடுப்போம்.
பாலியல்
வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்
வழக்குப் பதிவு செய்யப்படும். வன்கொடுமையில் இருந்து பெண்களைப் பாதுகாக்க
வேண்டும். தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து பெண்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. தில்லியில் கல்லூரி
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள நிலையில், கர்நாடகத்தில் அதுபோன்ற
சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
0 Responses to பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்: கர்நாடக முதல்வர்