இனம் படத்தினை வெளியிட்ட திருப்பதி பிறதர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில், இயக்குனர் லிங்குசாமி மக்களின் உணர்வுகளைத் தன்னால் புரிந்துக் கொள்ள முடிவதனால், தனக்க ஏற்படக் கூடிய பொருளாதார நஷ்டங்களையும் பொருட்படுத்தாது, இன்று அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
லிங்குசாமியின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்ஸ்ரூடியோ அருண் தனது பேஸ்புக் சமூக வலைத் தளத்தில் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றார். கண்டனத்திற்காக அவர் முன் வைத்திருக்கும் காரணங்கள் பலவும் கருத்திற் கொள்ளத்தக்கன என்பதனால், அக் கண்டனப் பதிவினை, அவருக்கான நன்றிகளுடன் இங்கு பதிவு செய்கின்றோம்.
லிங்குசாமிக்கு கண்டனங்கள்...
தமிழர்களை மிக சுலமாக உணர்ச்சிகளால் தூண்டிவிட்டு, அவர்களை எளிதில் ஒடுக்கிவிடலாம் என்பதைத்தான் தொடர்ச்சியாக பார்த்துவருகிறேன். தங்களது ஒட்டுமொத்த புகழும், வாழ்க்கை வரலாறும் ஒரே திரைப்படத்தில் சீரழிந்து போகப்போகிறது என்று நினைக்கும் ஒரு இனம்தான், கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே, முன்தோன்றி மூத்த இனம் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறது. படைப்புகளை விமர்சனத்தின் வழியாக, அல்லது அதை தவறென்று, சித்தரிக்கும் இன்னொரு படைப்பின் வழியாகத்தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தவறு என்று நினைக்கும் படைப்பை தடை செய்வதன் வாயிலாக அல்ல. சென்னை பலகலைக் கழக பாடத்திட்டத்தில் இருந்து, புதுமைப்பித்தன் சிறுகதை நீக்கப்படுவதை எதிர்த்து போராடியவர்கள் கூட, இந்த படைப்பிற்கு எதிராகக் கோரப்படும் தடையை எதிர்த்து எதுவும் பேசாமல் இருப்பது, இது உணர்ச்சி தொடர்புடைய விஷயம் என்பதைத்தான் காட்டுகிறது. இந்த படைப்பை, தடை செய்யக்கூடாது என்று சொல்பவர்கள் எல்லாரும், தமிழின துரோகிகள் மாதிரி சித்தரிக்கப்படுவார்கள் என்கிற அச்சத்தின் காரணத்தாலேயே எல்லாரும் வாய்மூடி கிடைக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் எந்த படைப்பையும் தடை செய்யவேண்டும் என்கிற கோசத்தை அறவே வெறுக்கிறேன். தடை செய் என்கிற கோஷம் ஒருவகையிலான பாசிஷமே. இனம் திரைப்படத்தை, விமர்சனங்களால் கிழித்தெறிந்து தூக்கிப் போட்டிருக்கலாம். ஆனால் அந்த படைப்பை ஒட்டுமொத்தமாக தடை செய் என்று கூறுவதெல்லாம் எந்த வகையில் நியாயம். தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யலாம். மாறாக, வன்முறையை கட்டவிழ்த்து விட முடியாது. இந்த படத்தை, யாருமே பார்க்காமல் புறக்கணிக்கலாம். ஆனால் யாருமே பார்க்ககூடாது என்று தடை விதிக்க கூடாது. லிங்குசாமி இந்த படத்தை திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெற்றது, மிக மோசமான வரலாற்று நிகழ்வு. லிங்குசாமி, தன்னுடைய படத்தில் ஒளிப்பதிவாளர் என்கிற நிலையில் இருந்து சந்தோஸ் சிவனை தூக்கி எறிந்திருந்தால் கூட, பிரச்சனையில்லை. ஆனால், தன்னுடைய அடுத்தப் படம், அவர் தயாரித்துக் கொண்டிருக்கும் கமலின் படம் போன்றவற்றின் வியாபாரத்தை மனதில் வைத்துதான், இந்த படத்தை திரையரங்கில் இருந்து திருமப் பெற்றுக்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
ஏன் இந்த திரைப்படத்தை, வாங்கும்போது, தனியாக பலருக்கும் திரையிட்டுக் கான்பிக்கும்போதேல்லாம் தெரியவில்லையா, இந்தப் படம் தமிழர்களுக்கு எதிரானப் படமென்பது. தமிழ்நாட்டில் வியாபாரத்திற்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்பதையே லிங்குசாமியின் இந்த அறிக்கை காட்டுகிறது. இந்த படத்தின் நஷ்டத்தை விட, அவரது அடுத்த இரண்டு பெரிய படங்களின் வியாபாரம் மிக முக்கியமானது. இந்த படத்தை திரும்பப் பெறுவதன் வாயிலாக, தமிழர்களுக்கு உற்ற தோழன் என்கிற அந்தஸ்தும், மரியாதையும் கிடைத்துவிடும். அடுத்தப் படங்களை போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கிவிடுவார்கள். சின்ன படத்தை பலியாக்கி, பெரிய படங்களை வியாபாரம் செய்தது போலாகிவிடும். எத்தனை மோசமான மனநிலை இது. திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தை, திருமப் பெரும் லிங்குசாமியின் இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
உண்மையை, நேர்மையை, நியாயத்தை, அறத்தை அது போலியாக இல்லாத பட்சத்தில், எந்த படைப்புகளும், எந்த சக்தியும் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதை நான் பெரிதும் நம்புகிறேன். தமிழ்நாட்டில் நடக்கும் இந்த மாரல் பொலிசிங்கை வன்மையாக கண்டிக்க வேண்டிய சமயம் இது. அரசு பாசிசமாக நடந்துக் கொள்வதைக் காட்டிலும் மிக மோசமானது, தனிமனிதர்களும், அமைப்புகளும் பாசிசமாக நடந்துக்கொள்வது. தமிழ்நாட்டில் அறம் பற்றி போதித்துக்கொண்டிருப்பவர்கள், எல்லாரும் தேர்தல் வேளைகளில், பிரச்சாரத்தில் பிசியாக இருப்பதால், இந்த திரைப்படத்தின் தடை பற்றியோ, அதன் போலித்தனத்தை பற்றியோ பேச நேரமில்லாமல் இருக்கிறது போல. என்ன பேசினாலும், ஒட்டு பாதிக்கப்படும் என்பதுதான் நிஜம்.
நன்றி: தமிழ் ஸ்ரூடியோ அருண்
4tamilmedia
0 Responses to லிங்குசாமிக்கு கண்டனங்கள்!