Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் ஏற்பட்ட பிரச்சினைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்வு கண்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தி வைத்ததன் மூலம் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன பிரச்சினையை தோற்றுவித்திருந்ததாவும், ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ 19வது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றி நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் (1978) ஏற்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகார முறை தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்வு கண்டுள்ளார். இதன்மூலம், முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், மஹிந்த ராஜபக்ஷவும் தோல்வியடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான புதிய ஆட்சி நாட்டில் உருவாகியது. புதிய அரசு நாட்டில் ஆட்சி அமைத்த நாள் முதல், இது பொய்யான அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், எமது அரசின் வாக்குறுதியை நாம் தற்போது நிறைவேற்றியுள்ளோம். 19வது திருத்தச் சட்டத்தினூடு ஜனாதிபதியின் பதவிக்காலம், ஆறு வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனாதிபதி பதவி 2 தடவைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சியில் நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவர் ஆட்சிக்கு வந்தவுடன், 18வது திருத்த சட்டத்தை அமுல்படுத்தி அதனூடாக அதிகாரங்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கு அக்காலப்பகுதியில் ஒத்துழைப்பு வழங்கியமைக்கு இத்தருணத்தில் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம். இதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to ஜே.ஆரினால் ஏற்பட்ட பிரச்சினைக்கு மைத்திரி தீர்வு கண்டுள்ளார்: ராஜித சேனாரத்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com