Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒருதலைக் காதலே பிரதான காரணம் என்று குற்றப் புலனாய்வுப்பிரிவு பொலிஸார் (சி.ஐ.டி) தெரிவித்துள்ளனர்.

வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் நபர் உட்பட ஆறு பேரினை கொலைக் குற்றவாளிகள் என்றும் குற்றப் புலனாய்வுப்பிரிவு பொலிஸார் அறிக்கையிட்டுள்ளனர்.

வித்தியா படுகொலை வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை காலை ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் ரியால் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுப்பிரிவு பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைக்கு சுவிஸ்குமார் திட்டமிட்டார் எனவும், இரண்டாம் மூன்றாம் சந்தேக நபர்களான தவக்குமார், ஜெயக்குமார் ஆகியோர் வித்தியா பாடசாலை செல்லும் போது வழிமறித்தனர் எனவும், ஆறாம் சந்தேக நபரான பிரதேச சபையில் பணியாற்றிய துசாந்தன் என்பவரும் ஐந்தாம் சந்தேகநபரும் வித்தியாவை வன்புணர்வு செய்தனர் எனவும் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் கடந்த எட்டு மாத காலமாக நடைபெற்று வருகின்றது. அந்த வழக்கு தொடர்பான சான்றுப் பொருட்களின் அறிக்கைகள், டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கைகள் என 12 அறிக்கைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளன. இந்த வழக்கு தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிக்கைகளும் கடந்த எட்டு மாதத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

கடந்த 19ஆம் திகதியன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது விசாரணை அறிக்கைகளை, அடுத்த வழக்குத் தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால், குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு கடுந்தொனியில் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலேயே நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

அதேவேளை, இதுவரை நடைபெற்ற விசாரணை அறிக்கையை கொழும்பு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கூட்டு கொள்ளை பிரிவு பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா மன்றில் வாசித்தார்.

“மாணவி வித்தியாவை வழக்கின் ஆறாவது சந்தேகநபரான துசாந்தன் ஒருதலையாக காதலித்ததார். அதனை வித்தியா ஏற்காத காரணத்தால் ஐந்தாவது சந்தேக நபரான சந்திரகாசனுடன் சேர்ந்து கடத்த திட்டமிட்டிருந்தார். அதற்கு 9ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

தங்களுக்கு உதவியாக ஏற்கனவே, களவு வழக்கொன்றில் வித்தியாவின் தயார் சாட்சி சொல்லி பாதிக்கப்பட்ட இரண்டு பேரையும் துணைக்கு வைத்துக் கொண்டனர். அவர்களே, இவ்வழக்கின் 2ஆவது, 3ஆவது சந்தேக நபர்கள். அவர்கள் வித்தியா பாடசாலை செல்லும் போது, அவரை வழிமறித்துக் கடத்தினர்.  துசாந்தன், சந்திரகாசன் ஆகியோர் வித்தியாவை பாலியல் வல்லுறவு செய்து பின்னர் கொலை செய்தனர். இச்சம்பவங்களை நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 11ஆவது சந்தேக நபர் நேரில் பார்த்திருக்கின்றார்.

குறித்த நபர், கொலை இடம்பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து புங்குடுதீவுக்கு கஞ்சா கொண்டு சென்றிருக்கின்றார்.

அங்கு தொடர்ந்து மூன்று தினங்கள் மதுவிருந்துடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதனை, சுவிஸ் குமார் ஏற்பாடு செய்திருக்கின்றார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதலாவது, 4ஆவது, 7ஆவது, 8ஆவது சந்தேக நபர்கள் கொலையைத் தெரிந்தும் அதனை மறைத்தமை மற்றும் தடயங்களை அழிக்க உதவியமை போன்ற குற்றங்களை புரிந்திருக்கிறார்கள்.

கடற்படையினர் தான் இந்தக் கொலையைப் புரிந்தனர் என்பதைக் காட்டுவதற்காக கொலையை கொடூரமாக புரிந்தது போன்று அரலி பற்றைக்குள் வித்தியாவின் சடலத்தை கொன்று சென்று கை, கால்களை இழுத்துக் கட்டியுள்ளனர்.” என்று நிசாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் எந்தவொரு விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்படாததை அடுத்து, சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, இக்கொலை வழக்குடன் சம்பந்தப்படாத நபர்களை விடுதலை செய்யுமாறு மன்றில் கோரினார்.

ஆனால், இதற்கு வித்தியா சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளான ஜே.வி.ரஞ்சித் குமார், சுகாஷ் ஆகியோர், விசாரணை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. டிஎன்ஏ அறிக்கை உள்ளிட்ட எந்தவொரு தடயப்பொருள் தொடர்பான அறிக்கைகளும் மன்றில் சமர்பிக்கப்படவில்லை. எனவே, சந்தேக நபர்களை விடுதலை செய்ய முடியாது என்ற வாதத்தை முன்வைத்தனர்.

வழக்கின் முடிவில், ஊர்காவற்துறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால், மாணவி வித்தியாவின் படுகொலை சகித்துக்கொள்ள முடியாத துன்பகரமான செயல். கடவுளின் கிருபையுடன் மாணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தப் படுகொலையுடன் தொடர்புடைய விடயங்கள் மேலும் சிலருக்கு தெரியும் என குற்றப்புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. எனவே, இது தொடர்பில் மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் 077 3291500 மற்றும் 077 8503002 ஆகிய இலக்கங்களுக்கு அறியத்தரவும் எனக்கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, இவ்வழக்குடன் சம்பந்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் அனைவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: ஒருதலைக் காதல் காரணம்: சி.ஐ.டி தெரிவிப்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com