ஜனாதிபதி தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இதுவரை முடிவு செய்யப் படவில் லை. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையடுத்து இன்று வந்த மம்தா காங்கிரஸ் பொது செயலாளர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்தார். இவர்களது சந்திப்பு 3 மணி நேரம் நீடித்தது.
இச்சந்திப்பின் போது தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்த அக்கட்சி திட்டமிட்டிருப்பதும், தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறித்தும் காங்கிரஸ் தனது நிலையை விளக்கி கூறியுள்ளது.
சோனியாவிடம் இதற்கு பதிலளித்த மம்தா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்து பேசிய பிறகே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து தெரியவரும் என்று பதிலளித்து விட்டு, முலாயம் சிங்கை சந்தித்தார் மம்தா.
இவர்களது சந்திப்பு சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. இச்சந்திப்பிற்குப் பின் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர்களிருவரும்,
’’காங்கிரஸ் கட்சியின் பரிசீலனையில் உள்ள வேட்பாளர்களை குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. நாங்கள் இப்பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பது குறித்து விவாதித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்.
அதன்படி எங்களது முதல் விருப்ப வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இருக்கிறார். இரண்டாவது விருப்பத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார்.
மூன்றாவது விருப்பத்தில் முன்னாள் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இருக்கிறார். இவர்களைத்தான் நாங்கள் ஜனாதிபதி வேட்பாளர்களாக முன்மொழிகிறோம்’’என்று கூறினர்.
காங்கிரஸ் கட்சி தேர்வு செய்த வேட்பாளர்களை விடுத்து, புது வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்வு செய்திருப்பது டெல்லி வட்டார அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



0 Responses to ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து மம்தா அதிரடி: டெல்லி பரபரப்பு