Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கில் அண்மைக்காலமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புத்தரப்பினரால் அச்சுறுத்தப்படுவது மற்றும் விசாரிக்கப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பு உயரதிகாரிகளிடம் விளக்கம் கோருமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மேலதிகச் செயலாளர் சமன் அதாவுட ஹெட்டிகேக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் தயாபரன் பயங்கரவாத தடுப்புப்பிரிவு (TID) அதிகாரி எனக் கூறியவர்களினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதே பிரதமர் இந்த அவசர அறிவுறுத்தலை விடுத்தார்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகள், சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடகவியலாளர் தயாபரன் பிரதமருடனான சந்திப்புக்கு வருவதற்காக புதன்கிழமை மாலை புறப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரி எனக் கூறிக் கொண்டு நவரட்ன என்பவர் வந்து கொலைச் சம்பவமொன்று சம்பந்தமாக விசாரிக்க வேண்டுமெனத் தெரிவித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதற்கான கடிதத்தைக் காண்பித்து பின்னர் வருவதாக கூறிவிட்டு சென்றதாகவும், இதுபோன்று பல சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெறுவதாகவும் இது ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

எமது வீடு, அலுவலகம், என்று தொடங்கி ஊரிலும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் இது எம்மை மனதளவில் பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது என தயாபரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக உடனடியாக பொலிஸ் தரப்புடன்பேசி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தனது மேலதிகச் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். பயங்கரவாதத் தடுப்பு பிரிவு (TID) இப்போது கிடையாது. அப்படி இருக்கும்போது இது எப்படி நடந்தது என்பதை விசாரித்தறியுமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மற்றொரு தமிழ் ஊடகவியலாளர் நிக்சன் விடுத்தவேண்டுகோளில் வடக்கில் காணாமற்போனோர் கடத்தப்பட்டோர் கொல்லப்பட்டோர் தொடர்பில் உண்மைகளை கண்டறியும் பொருட்டு தனியான விசாரணைப் பிரிவை அமைத்து துரித விசாரணைக்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர், இது தொடர்பில் காலம் கடத்தாமல் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்ததுடன் ஊடக அமைப்புகளும், ஊடகவியலாளர்களும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

செய்திகளை வெளியிடுவதில் ஊடக நிறுவனங்களுக்கிடையில் ஒற்றுமை பேணப்படவேண்டும். அப்படி நடக்கும் போது ஊடகங்கள் விடயத்தில் தான் ஒருபோதும் தலையிடப் போவதில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஓரிரு ஊடகங்கள் எனக்குச் சேறுபூசுவதற்கென்றே கங்கணம்கட்டிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின. இவ்வாறு பிரதமரையோ, ஜனாதிபதியையோ விமர்சித்து சேறுபூசுவதற்கு 2015 ஜனவரிக்கு முன்னர் உங்களால் முடிந்ததா? என்பதை எண்ணிப்பார்க்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கில் ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு தரப்பினரின் அச்சுறுத்தல்; விசாரணைக்கு ரணில் உத்தரவு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com